நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
சர்தார்ஜி ஜோக்குகள் - இன்றைய காலக்கட்டத்தில் இவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும், பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் இன்றும் இம்மாதிரியான நகைச்சுவைகள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆகையால், நமக்கெல்லாம் ஒரு நினைவூட்டலாக இந்த பதிவு.
நம்மில் பலரும் அறியாமையால் தான் இன்றும் சர்தார்ஜி நகைச்சுவைகளை பகிர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அதாவது இது தவறென்று தெரியாமலேயே.
இதனை பகிர்பவர்கள் இதன் பின்னணியை அறிந்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை. வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பதினெட்டாம் நூற்றாண்டில் நாதிர் ஸா மன்னனின் படைகளிடம் இருந்து பெண்களை காக்க நள்ளிரவு நேரத்தில் கொரில்லா யுத்தம் செய்து பெண்களை விடுதலை செய்வனராம் சீக்கியர்கள். அவர்கள் குறைந்த அளவில் இருந்ததே இந்த நள்ளிரவு தாக்குதலுக்கு காரணம். ஆனால் இன்றோ இந்த வரலாற்றை அறியாத நம்மவர்கள் சீக்கியர்களை வைத்தே '12 மணி' ஜோக்குகள் என்று ஒன்றை உருவாக்கி அவர்களை கேலி செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல், சீக்கியர்கள் மீதான ஈகோவும் இம்மாதிரியான நகைச்சுவைகள் தோன்ற காரணமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சரி போகட்டும். சர்தார் நகைச்சுவைகளை எப்படி கையாள்வது. இது சரியா??
"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல" - நாயகம் (ஸல்) அவர்கள், தன்னுடைய இறுதி பேருரையில்..
எல்லா இனத்தவரும் சமமே. சீக்கியர்களின் அறிவுத்திறனை பகடி செய்தே சர்தார்ஜி நகைச்சுவைகள் வருகின்றன. இன்னொரு இனத்தவரை நம்மை விட அறிவுத்திறனில் தாழ்ந்தவராக எண்ணுவது இறைநம்பிக்கையாளர்களுக்கு அழகல்ல. அப்படியிருக்க எப்படி ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இனத்தவரை கேலி செய்ய முடியும்?
அதுமட்டுமல்லாமல், நமக்கு என்ன விரும்புகின்றோமோ அதனையே அடுத்தவருக்கும் விரும்ப சொல்கின்றது இஸ்லாம். தமிழ் என்னும் நம் இனம், அறிவுத்திறனில் தாழ்ந்த இனமாக கருதப்பட்டு கேலிச் செய்யப்படுவதை நாம் விரும்ப மாட்டோம். பிறகு எப்படி நமக்கு விரும்பாத ஒன்றை அடுத்தவருக்கு செய்துக்கொண்டிருக்கின்றோம்?
நான் முன்னமே சொன்னது போன்று சர்தார்ஜி நகைச்சுவைகளை பலரும் அறியாமையால் தான் பகிர்ந்து வருகின்றனர். சும்மா நகைச்சுவைக்காக தானே என்று நினைத்து தான் பகிர்ந்து வருகின்றனர். நகைச்சுவை என்ற காரணத்தை சொல்லி ஒரு இனத்தையே கேலிக்குள்ளாக்குவது ஏற்புடையதா?
அறியாமல் செய்த காலங்கள் போகட்டும். இனியும் நாம் இதனை தொடர்ந்தால் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு இந்த செய்கைகளை கைவிடுவோம். சர்தார் நகைச்சுவைகளை பகிர மாட்டோம் என்று உறுதிக்கொள்வோம்.
நன்றி: ஆஷிக் அஹ்மத் | Tweet | ||||


