"மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
'பிரதமர் பதவிக்கு மோடி - இலக்கு 272-ல் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பேசியது:
'நான் சொல்வதை தயவுசெய்து குறித்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது, எங்கேயாவது எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால், நாங்கள் தலை வணங்கி மன்னிப்புக் கோருவோம் என்று உறுதியளிக்கிறேன்.
பாஜக, இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. இந்த விஷயத்தில் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை இஸ்லாமிய சமூகத்தினர் நம்ப வேண்டாம். தேச நலனைக் கருத்தில்கொண்டு, இஸ்லாமியர்கள் இம்முறை பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
எங்களை ஒருமுறைத் தேர்வு செய்து பாருங்கள். உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், எங்களுக்கு அதன்பின் ஒருபோதும் ஆதரிக்க வேண்டாம்.
ஓர் அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்லாமல், சகோதரத்துவமும், மனிதநேயமும் மிக்க வலிமையான தேசத்தை உருவாக்குவதற்கு இஸ்லாமிய சமூகத்தினர் பாஜகவை ஆதரிக்க வேண்டும்' என்றார் ராஜ்நாத் சிங்"
நன்றி: தி ஹிந்து.
தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்ன கூத்தடிக்க போகின்றதோ பாஜக.
ராஜ்நாத் சிங் அவர்களே, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது' என்ற பழமொழி உங்களுக்கு அப்படியே பொருந்துகின்றது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி பேசும் போது கொஞ்சம் கூட உங்க மனசாட்சி உறுத்தவில்லையா?
வாய்ப்பு என்பது யாருக்கு வழங்கப்பட வேண்டியது? தேளை மடியில் வைத்துக்கொன்டு அது கொட்டாது, பயப்படாம இருங்க என்று கூறுபவர்களுக்கு வழங்கப்படுவதா வாய்ப்பு? வகுப்புவாத சித்தாந்தங்களை தன் அடிப்படையிலேயே வைத்துக்கொண்டுள்ள நீங்கள் இப்படியாக பேசும் போது கொஞ்சம் கூட யோசிக்க தோன்றாதா?
அத்வானி நடைப்பயணம், பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் இனப்படுகொலை, முஸாபர்நகர் வகுப்பு கலவரம் இத்யாதி இத்யாதி என்று வரிசையாக மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு இன்று முஸ்லிம்களின் பக்கம் தொபுக்கடீர் என்று விழுகின்றீர்களே உங்களையெல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது?
அதிலும் மோடி போன்ற ஒருவரை பிரதம வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் பேசக்கூடிய தேன் தடவிய வார்த்தைகளுக்கு மயங்கும் நிலையில் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை. நீங்கள் ஏற்படுத்திய வகுப்புவாத காயங்களின் வடு ஆறாமல் உறுத்திக்கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் சந்திப்போம் அய்யா. எங்களின் வேதனையை உணர்ந்த முஸ்லிமல்லாத சகோதரனோடு இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் உங்கள் தோல்விக்காக பாடுபடுவான்.
உங்கள் பேச்சை படிக்கும் போது, இம்சை அரசன் படத்தில் தியாகு சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வந்து தொலைகின்றது. "படுத்தே விட்டாரையா"
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ
| Tweet | ||||


