Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday 28 May 2013

இந்தியாவில் நாத்திகர்கள் அதிகரிக்கின்றனரா? 'விடுதலை' தள புரட்டுக்கு பதிலடி..


ந்தியாவில் நாத்திகர்கள் அதிகரித்து விட்டதாகவும், இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டதாகவும் ஒரு ஆய்வு கூறுவதாக கூறி சமூக தளங்களில் அங்கலாய்க்கின்றனர் நாத்திகர்கள். ஆனால் இதற்கு நேர்மாறான தகவலை தான் அந்த ஆய்வு தருகின்றது என்பதை நாத்திகர்கள் உணர்ந்தால் என்ன செய்ய போகின்றார்கள்? ஈயடிச்சான் காப்பியாக மற்றவர் கூறுவதை பரப்புவதற்கு பதிலாக தெளிவாக ஆராயலாமே? உண்மை என்ன என்பதை விளக்குகின்றது இந்த கட்டுரை..

இன்று விடுதலை தளத்தில் வந்த ஒரு பதிவும், உண்மையை ஆராயாமல் அதனை அப்படியே பிரதியெடுத்து போட்ட தமிழ் ஓவியா தளத்தின் பதிவும் அதிர்ச்சியளித்தன.  

விடுதலை தளம் சொல்ல வருவது இதுதான். பிரபல ஆய்வு நிறுவனமான Gallup, ஆத்திகம் நாத்திகம் குறித்த கருத்துக்கணிப்பை பல்வேறு நாடுகளில் சென்ற ஆண்டு நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில், கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகின்றதாம். இதன் அடிப்படையில் பின்வருமாறு தலையங்கம் வெளியிடுகின்றது விடுதலை தளம்..

"இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது"

இது உண்மையா என்பதை அறிய Gallup ஆய்வின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை முதலில் பார்த்து விடுங்கள். இங்கே 

உண்மை என்னவென்றால் இந்தியாவில் இறைநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையெல்லாம் குறையவில்லை, மாறாக நாத்திகர்களின் எண்ணிக்கை தான் குறைந்துள்ளது. மேற்சொன்ன ஆவணத்தின் 12-ஆம் பக்கம் இந்த உண்மையை உரக்க சொல்கின்றது. கீழே பாருங்கள்.

படத்தை சுட்டி பெரிதாக காணுங்கள்

மிகத் தெளிவாக, இந்த ஆவணம், 2005-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாத்திகர்களின் தற்போதைய இந்திய எண்ணிக்கை 1% குறைந்துள்ளதாக பறைசாற்றுகின்றது. 

பின்னர் எப்படி விடுதலை தளம் துணிந்து இந்த பொய்யை/புரட்டை கட்டுரையாக வெளியிட்டது? ஆங்கிலத்தை தவறாக புரிந்துக்கொண்டது காரணமாக இருக்கலாம். எப்படி என்பதை பின்வருமாறு விளக்கலாம். 

நம் ஊரிலேயே மூன்று வகையான மனிதர்களை பார்த்திருப்போம். 

  • மத நம்பிக்கைகள் மீது பற்றுக்கொண்டு அதன்படி நடக்க விரும்புபவர்கள் (ஆங்கிலத்தில் இவர்களை Religious people என்பார்கள்). 
  • ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மத கோட்பாடுகளை பின்பற்றாமல் அசட்டையாக இருப்பவர்கள். இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், தாங்கள் சார்ந்த மத கோட்பாடுகளை பின்பற்றுவதில் அலட்சியமாக இருப்பவர்கள் (இவர்களை ஆங்கிலத்தில் Not Religious people என்பார்கள்). 
  • நாத்திகர்கள், அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் (இவர்களை Atheist என்பார்கள்). 

மேலே சொன்ன மூன்றின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மக்களிடம் ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை தான். 

1) Are you religious?
2) Are you not religious?
3) Are you a convinced Atheist?

இதன் அடிப்படையில் 81% இந்திய மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதாகவும், 13% மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை எனவும் (கவனிக்கவும், இவர்கள் தங்கள் மதத்தை துறந்தவர்களோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களோ இல்லை). 3% மக்கள் தங்களை நாத்திகர்கள் எனவும் கூறியுள்ளனர். Not religious என்பதை தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தவறாக புரிந்துக்கொண்டுவிட்டது விடுதலை பத்திரிக்கை/தளம். 

இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்துவிட்டதாக குறிப்பிடும் 'விடுதலை', யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? மிக எளிமையாக புரியும் இந்த லாஜிக்கை எப்படி கோட்டைவிட்டது விடுதலை தளம்? 

விடுதலை தளத்திலும், தமிழ் ஓவியா தளத்திலும் அவர்கள் செய்த தவறை சுட்டி காட்டி நான் இட்ட கருத்தை பின்வருமாறு முடித்திருந்தேன் 

//உங்களின் இந்த பதிவு தலைப்பும், இந்தியா பற்றிய ஆய்வு தகவல்களும் தவறான வழிகாட்டுதலாகும். இதே கட்டுரை விடுதலை பத்திரிக்கையில் வந்திருந்தால், ஆய்வு நடத்தியவர்களின் கருத்தை தவறாக சித்தரித்து அவர்களை கேலிக்குள்ளாக்கும் அணுகுமுறையாகும். நானும் என்னை போன்ற பலரும் பெரிதும் மதிக்கும் தந்தை பெரியார் அவர்கள் சார்ந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இப்படியாக செயல்படுவது வருத்தத்தை தருகின்றது. ஆகையால் தாங்கள் இந்த பதிவை திருத்தி, உண்மைக்கு ஏற்றமாறு அமைக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். 
நன்றி,  
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ //

திருத்தங்களை மேற்கொண்டு வருத்தம் வெளியிடுமா விடுதலை தளம்? பகுத்தறிவு என்பது நாத்திகம் மட்டுமே சம்பந்தப்பட்ட சொல்லாக இருந்தால் இந்திய பகுத்தறிவாளர்கள் போக வேண்டிய தூரம் அதிகரித்திருக்கின்றது என்பதையே இந்த ஆய்வு காட்டுகின்றது..

நன்றி...

Saturday 18 May 2013

மோடி பலூனை ஊதுவது யார்?


லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.

லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட விதிமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.

மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.

நான் வளர்ச்சியின் பிரதிநிதி என்கிறார் மோடி. ஆனால், எது வளர்ச்சி என்பதற்கு நம்மிடம் சரியான வரையறைகள் இல்லை. குஜராத் அரசு சமூகத் துறைகளில் ஒழுங்காகச் செயல்படவில்லை என்பது தொடர்ந்து அவ்வப்போது வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் உண்மை. 2011இல் வெளியான மத்தியத் திட்டக் குழு அறிக்கை குஜராத் மாநிலத்தில் நிலவும் வறுமையை வெளிக்கொண்டுவந்தது - மாநிலத்தில் 44.6 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள். 2012இல் வெளியான தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அறிக்கை தண்ணீர் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தைப் பட்டியலிட்டது. “குடிநீர்க் கொள்கை சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றுநீர் மாசுபடுவது சம்பந்தமாக அரசு அக்கறை காட்டவில்லை. சபர்மதி ஆற்று நீரைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை” என்று கடந்த ஆண்டு அறிக்கை சொன்னது. குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6 மீட்டர் கீழே செல்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 30 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த இடங்களில், இப்போது தண்ணீருக்கு 152 மீட்டருக்கும் கீழே செல்ல வேண்டியிருக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். முந்தைய அரசுகளைப் போலவே இந்தப் பிரச்சினையை மோடி அரசும் அலட்சியப்படுத்துகிறது.

குஜராத் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் வகிக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட கடந்த தேர்தலில் மோடி நிறுத்தவில்லை என்பது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், நகர்ப்புற முஸ்லிம்கள் ஏழைகளாக உலவும் 4 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது. மோடி தன்னுடைய வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடிய சனாந்த் தொகுதியில் (டாடா நானோ ஆலை அமைக்கப்பட்ட இடம்) பாஜக தோற்றது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது.

குஜராத்தை வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசும் பலரும் தட்டாமல் குறிப்பிடுவது குஜராத்தின் எரிசக்தித் துறை வளர்ச்சி. உண்மையில், மோடி அரசின் பல முறைகேடுகள் குடிகொண்டிருக்கும் துறை இது. மின்சார உற்பத்தியில் குஜராத் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று குரல் கொடுப்போர் பலர் பேசாத ஒரு விஷயம், குஜராத்தின் மொத்த மின் உற்பத்தித் திறனான 16,945 மெகா வாட்டில் தனியார் பங்களிப்பு மட்டும் 6,864 மெகாவாட் என்பது. அதாவது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தனியாருடையது. தவிர, நாட்டிலேயே மின்சாரத்தை அதிக விலைக்கு விற்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கான குறைந்தபட்ச தேவை 50 யூனிட். குஜராத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் ஒரு குடும்பமே இந்த மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.95 கொடுக்க வேண்டும். தமிழகத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு இது (தமிழகத்தில் ஒரு யூனிட் ரூ. 1.10) . நாட்டிலேயே சூரிய மின் சக்தியை முன்னெடுப்பதிலும் குஜராத் முன்னணியில் இருக்கிறது. ஆனால், வால்மார்ட்டும் மான்சாண்டோவும் அந்தச் சூரிய மின் சக்தி உபகரணங்களின் பின்னணியில் இருக்கின்றன; சூழலுக்குப் பெரும் நஞ்சான கேட்மியம் டெலுராய்டைக் காற்றிலும் நிலத்திலும் நீரிலும் எதிர் காலத்தில் குஜராத் சுமக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்கிறார் மின்சாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வரும் சமூகச் செயல்பாட்டாளர் காந்தி. குஜராத் தொடர்பாக ஊதப்படும் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியின் பின்னணியிலும் இப்படி சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டு. எப்படி ஏனைய இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் கதைகளுக்குப் பின்னணியிலும் சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டோ அப்படி. ஆனால், குஜராத்தில் மட்டும் இந்தச் சங்கதிகள் ஒரு நாள் செய்தியோடு அடக்கமாகிவிடுகின்றன. ஏன்?

நம்முடைய முதலாளிகளுக்கு இன்று மோடி தேவைப்படுகிறார். மன்மோகன் சிங் அரசு பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம், ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் மன்மோகன் சிங் போதுமானவராக இல்லை அல்லது அவருடைய தேவைக்கான காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களுடைய தேவை இன்னும் துரிதமாகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகச் செயல்படும் ஒருவர்தான். முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்ய சட்டரீதியாக மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சின்னச் சின்ன நடைமுறைகளைக்கூட உடைத்து எறியவும் இந்திய வனங்களில் புகுந்து சூறையாட ஏதுவாக அங்குள்ள எதிர்ப்புகளை வேர் அறுக்கவும் ஓர் ஆள் தேவைப்படுகிறார். இந்தியாவில் செம்மையான செயல்பாட்டுக்கு கார்ப்பரேட் துறைதான் முன்னோடி என்பதை வெளிப்படையாகச் சொல்லும் மோடி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். குஜராத்தில் ஒரு நிறுவனம் நினைத்தவுடன் தொழில் தொடங்குவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் ஓடியாடிச் செய்யும் மோடி அதற்குப் பொருத்தமானவர் என்று அவர்களும் நம்புகிறார்கள். மத்திய அரசு இப்போது முன்மொழிந்திருக்கும் தேசிய முதலீட்டு வாரியத்துக்கு முன்னோடி மோடியின் குஜராத் பாணிதான். உங்கள் ஊரில், ரூ. 1000 கோடிக்கு மேல் ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் முடிவெடுத்துவிட்டால் போதும். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு எதைப் பற்றியும் அந்நிறுவனம் கவலைப்பட வேண்டியது இல்லை. தேசிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி மட்டும் அதற்குப் போதும். யாரும் அந்த நிறுவனத்தைக் கேள்வி கேட்க முடியாது . . . உள்ளூர் மக்களில் தொடங்கி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி ஓர் அணுகுமுறையைத்தான் அரசிடமிருந்து எல்லா விஷயங்களிலும் முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் அதைச் செய்கிறது. ஆனால், தாமதமாகச் செய்கிறது. யோசித்து இழுத்தடித்துச் செய்கிறது. முதலாளிகள் துணிச்சலான துரித சேவையை விரும்புகிறார்கள். காங்கிரஸுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் குஜராத்தின் கப்ரதா பகுதி கிராம மக்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து 5 கி.மீ. தூரம் நடந்து வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் - இரு குடங்கள் குடிநீருக்காக. “கப்ரதா பகுதியில் உள்ள முப்பது சொச்ச கிராம மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தாயிற்று அரசாங்கத்திடம்; ஒன்றும் நடக்கவில்லை’’ என்கிறார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜிட்டு சௌத்ரி. மக்கள் தண்ணீருக்காகக் கிடையாய்க் கிடக்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும் . . . முதலாளிகள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிக்காகக் காத்திருக்கிறது இந்தியா!


Sunday 12 May 2013

சபாஷ்...கலக்கும் காரைக்கால் எம்எல்ஏ


புதுச்சேரி மாநில முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திமுக சட்டமன்ற தலைவரும், புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவருமாகிய A.M.H.நாஜிம் குறித்து தினமலரில் சில தினங்களுக்கு முன்பாக வெளிவந்த செய்தி கவனத்தை ஈர்த்தது. முதலில் அந்த செய்தியை பார்த்துவிடுவோம். 

---     
காரைக்கால் தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் நாஜிம். கடந்த 25 ஆண்டுகளாக, தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக வலம் வருகிறார். காரைக்கால் மாவட்ட கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பதுடன், தொகுதி மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை தீர்த்து வைப்பதிலும், அதிக அக்கறை எடுத்துக்கொளும் நாஜிம், அட்டவணை போட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

A.M.H நாஜிம் (முதலில் உட்கார்ந்திருப்பவர்)

வாரத்தில் ஒவ்வொரு நாட்களையும், ஒவ்வொரு பகுதிக்கு ஒதுக்கி உள்ளார். சனிக்கிழமை நிரவி, வெள்ளிக்கிழமை மேல ஓடுதுரை, திங்கள்கிழமை மதகடி என ஒவ்வொரு கிழமையிலும் ஒரு பகுதிக்கு சென்று, அங்கு முகாம் அமைத்து, புகார் மனுக்களை பெற்று, குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வேலைப்பளு மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய நிலையில், புகார் தெரிவிப்பதற்காக, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் காத்திருக்க, பொதுமக்கள் பலர் விரும்புவதில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, காரைக்கால் தெற்கு தொகுதி மக்கள் தங்களது புகார்களை தெரிவிப்பதற்காக, பிரத்யேகமான வெப்சைட் ஒன்றை நாஜிம் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. www.complainbox.in என்ற இணையதளத்தில், தெற்கு தொகுதி மக்கள் தங்களது குறைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

இணையதளம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, ஐந்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் மின் விளக்குகள் எரியவில்லை, சாலை குண்டும் குழியுமாக உள்ளது, குப்பைகள் அகற்றபடாமல் குவிந்து கிடக்கிறது, கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு என, பலவகையான புகார்கள் இணையதளம் மூலம் வருகின்றன.

புகார் பெறப்பட்ட உடன், அந்த பகுதிக்கு சென்று, ஊழியர்கள் பார்வையிட்டு, விபரங்களை சேகரித்து வருவார்கள். இதையடுத்து,சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாஜிம் எம்.எல்.ஏ., பேசி, நடவடிக்கை எடுப்பார். ஒவ்வொரு புகாரும், நிவர்த்தி செய்யப்பட்ட பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

இதுகுறித்து நாஜிம் எம்.எல்.ஏ., கூறும்போது, 'பொதுமக்கள் எளிய முறையில் புகார்களை, தங்களது எம்.எல்.ஏ.,வுக்கு தெரிவிக்கும் வகையில், புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ஊழியர்களையும் நியமிதுள்ளேன். பலதரப்பட்டுள்ள புகார்கள் வருகின்றன. நிவர்த்தி செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது' என்றார்.
---

நாஜிம் அவர்களின் தளத்தை பார்வையிட்ட போது ரொம்பவே ஆச்சர்யப்பட்டோம். தொகுதி மக்களின் குறைகளுக்கு எம்எல்ஏ நேரடியாகவே பதில் அளிக்கின்றார். அரசியல்வாதிகள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படும் இந்நாளில் இப்படியான சட்டமன்ற உறுப்பினரை பார்ப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது. 

நன்றி: 8-5-2013 தேதியிட்ட புதுச்சேரி பகுதி தினமலர் செய்தி.
செய்தி தொகுப்பு:  ஜீனத் ஆஷிக் 

Thursday 9 May 2013

எதியூரப்பாவால் பிஜேபிக்கு தோல்வியா? - உண்மை அதுவல்ல


ர்நாடக தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே பிஜேபிக்கு கடும் பின்னடைவை தந்திருக்கின்றன. அதே நேரம், இந்த தோல்விக்கு எதியூரப்பாவே காரணம் என்று பிஜேபி தலைவர்கள் கூறுவதை காண முடிகின்றது. ஆனால் இது உண்மையா? நிச்சயமாக இல்லை. வெகுசில தொகுதிகளை தவிர்த்து, ஏனைய தொகுதிகளில் எதியூரப்பா கட்சி மற்றும் பிஜேபி ஆகிய இரண்டும் பெற்ற வாக்குகளை கூட்டினாலும் கூட முதலிடம் பெற்ற கட்சியை முந்தவில்லை. 

ஆதாரம்: தொகுதிவாரியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது தேர்தல்துறை . அதில் மேற்சொன்ன உண்மையை காணலாம் http://eciresults.ap.nic.in/ConstituencywiseS1034.htm. (இந்த சுட்டிக்கு சென்று ஒவ்வொரு தொகுதியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒருவர் காணலாம்) 


இன்னும் சொல்ல போனால் பல தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று பிஜேபி அசிங்கப்பட்டுள்ளது. எதியூரப்பா கட்சி இல்லாமலும் கூட காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை பெற்றிருக்கும். எதியூரப்பா கட்சியாலேயே தாங்கள் தோற்றோம் என்ற பிஜேபியின் பிரச்சாரம் உண்மையை மறைக்கும்  கேவலமான வாய் சவடாலே அன்றி வேறொன்றும் இல்லை. ஊழல், நிலஆக்கிரமிப்பு, ஆபாசம், பெங்களூருவின் சுகாதாரமற்ற சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக பிஜேபியை கர்நாடக மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டனர் என்பதே உண்மை...