இந்தியாவில் நாத்திகர்கள் அதிகரித்து விட்டதாகவும், இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டதாகவும் ஒரு ஆய்வு கூறுவதாக கூறி சமூக தளங்களில் அங்கலாய்க்கின்றனர் நாத்திகர்கள். ஆனால் இதற்கு நேர்மாறான தகவலை தான் அந்த ஆய்வு தருகின்றது என்பதை நாத்திகர்கள் உணர்ந்தால் என்ன செய்ய போகின்றார்கள்? ஈயடிச்சான் காப்பியாக மற்றவர் கூறுவதை பரப்புவதற்கு பதிலாக தெளிவாக ஆராயலாமே? உண்மை என்ன என்பதை விளக்குகின்றது இந்த கட்டுரை..
இன்று விடுதலை தளத்தில் வந்த ஒரு பதிவும், உண்மையை ஆராயாமல் அதனை அப்படியே பிரதியெடுத்து போட்ட தமிழ் ஓவியா தளத்தின் பதிவும் அதிர்ச்சியளித்தன.
விடுதலை தளம் சொல்ல வருவது இதுதான். பிரபல ஆய்வு நிறுவனமான Gallup, ஆத்திகம் நாத்திகம் குறித்த கருத்துக்கணிப்பை பல்வேறு நாடுகளில் சென்ற ஆண்டு நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில், கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகின்றதாம். இதன் அடிப்படையில் பின்வருமாறு தலையங்கம் வெளியிடுகின்றது விடுதலை தளம்..
"இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது"
இது உண்மையா என்பதை அறிய Gallup ஆய்வின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை முதலில் பார்த்து விடுங்கள். இங்கே
உண்மை என்னவென்றால் இந்தியாவில் இறைநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையெல்லாம் குறையவில்லை, மாறாக நாத்திகர்களின் எண்ணிக்கை தான் குறைந்துள்ளது. மேற்சொன்ன ஆவணத்தின் 12-ஆம் பக்கம் இந்த உண்மையை உரக்க சொல்கின்றது. கீழே பாருங்கள்.
படத்தை சுட்டி பெரிதாக காணுங்கள்
மிகத் தெளிவாக, இந்த ஆவணம், 2005-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாத்திகர்களின் தற்போதைய இந்திய எண்ணிக்கை 1% குறைந்துள்ளதாக பறைசாற்றுகின்றது.
பின்னர் எப்படி விடுதலை தளம் துணிந்து இந்த பொய்யை/புரட்டை கட்டுரையாக வெளியிட்டது? ஆங்கிலத்தை தவறாக புரிந்துக்கொண்டது காரணமாக இருக்கலாம். எப்படி என்பதை பின்வருமாறு விளக்கலாம்.
நம் ஊரிலேயே மூன்று வகையான மனிதர்களை பார்த்திருப்போம்.
- மத நம்பிக்கைகள் மீது பற்றுக்கொண்டு அதன்படி நடக்க விரும்புபவர்கள் (ஆங்கிலத்தில் இவர்களை Religious people என்பார்கள்).
- ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மத கோட்பாடுகளை பின்பற்றாமல் அசட்டையாக இருப்பவர்கள். இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், தாங்கள் சார்ந்த மத கோட்பாடுகளை பின்பற்றுவதில் அலட்சியமாக இருப்பவர்கள் (இவர்களை ஆங்கிலத்தில் Not Religious people என்பார்கள்).
- நாத்திகர்கள், அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் (இவர்களை Atheist என்பார்கள்).
மேலே சொன்ன மூன்றின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மக்களிடம் ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை தான்.
1) Are you religious?
2) Are you not religious?
3) Are you a convinced Atheist?
இதன் அடிப்படையில் 81% இந்திய மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதாகவும், 13% மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை எனவும் (கவனிக்கவும், இவர்கள் தங்கள் மதத்தை துறந்தவர்களோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களோ இல்லை). 3% மக்கள் தங்களை நாத்திகர்கள் எனவும் கூறியுள்ளனர். Not religious என்பதை தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தவறாக புரிந்துக்கொண்டுவிட்டது விடுதலை பத்திரிக்கை/தளம்.
இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்துவிட்டதாக குறிப்பிடும் 'விடுதலை', யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? மிக எளிமையாக புரியும் இந்த லாஜிக்கை எப்படி கோட்டைவிட்டது விடுதலை தளம்?
விடுதலை தளத்திலும், தமிழ் ஓவியா தளத்திலும் அவர்கள் செய்த தவறை சுட்டி காட்டி நான் இட்ட கருத்தை பின்வருமாறு முடித்திருந்தேன்
//உங்களின் இந்த பதிவு தலைப்பும், இந்தியா பற்றிய ஆய்வு தகவல்களும் தவறான வழிகாட்டுதலாகும். இதே கட்டுரை விடுதலை பத்திரிக்கையில் வந்திருந்தால், ஆய்வு நடத்தியவர்களின் கருத்தை தவறாக சித்தரித்து அவர்களை கேலிக்குள்ளாக்கும் அணுகுமுறையாகும். நானும் என்னை போன்ற பலரும் பெரிதும் மதிக்கும் தந்தை பெரியார் அவர்கள் சார்ந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இப்படியாக செயல்படுவது வருத்தத்தை தருகின்றது. ஆகையால் தாங்கள் இந்த பதிவை திருத்தி, உண்மைக்கு ஏற்றமாறு அமைக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹமத் அ //
திருத்தங்களை மேற்கொண்டு வருத்தம் வெளியிடுமா விடுதலை தளம்? பகுத்தறிவு என்பது நாத்திகம் மட்டுமே சம்பந்தப்பட்ட சொல்லாக இருந்தால் இந்திய பகுத்தறிவாளர்கள் போக வேண்டிய தூரம் அதிகரித்திருக்கின்றது என்பதையே இந்த ஆய்வு காட்டுகின்றது..
நன்றி...
Tweet | ||||