Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Thursday 27 February 2014

தமிழர் நலம் - புதைத்து விடுவோம் - பாஜக


மிழர் நலம் குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தி ஹிந்து இதழிற்கு அளித்துள்ள பேட்டியை பாருங்கள். தமிழ் உணர்வு, இன உணர்வு என்று சொல்லிக்கொண்டு பாஜகவிற்கு கொடி பிடிப்பவர்களின் கூடுதல் கவனத்திற்கு இந்த பதிவு. மற்றவர்கள் இந்த நகைச்சுவையாளரின் பேட்டியை படித்து வயிறு குலுங்க சிரிக்கலாம். 

The Hindu: இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?

Rajnath Singh: நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என் நினைவுக்கு வரவில்லை!

(ஆஹா என்னவொரு பதில்!!! ஒரேடியாக புதைத்துவிடுவது நல்லதாம். பாஜகவிற்கு ஆதரவளிக்கும் தமிழின உணர்வாளர்களே சொல்லுங்க எல்லாத்தையும் புதைத்துவிட்டு போய் விடுவோமா?...இன்று இதை சொன்னவர்கள், ஒரு வேலை ஆட்சிக்கு வந்து இனப்படுகொலை எல்லாம் பழைய சம்பவம், மறந்துவிடுவோம் என்று சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?..Note this point... தங்களின் முந்தைய அரசு என்ன முடிவு எடுத்ததென்று கட்சியின் தலைவரான இவருக்கே தெரியாதாம்...அட்ரா சக்க...அட்ரா சக்க...)

The Hindu: தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்‌ஷ மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?

Rajnath Singh: நோ கமென்ட்ஸ்!

(சூப்பரப்பு...நீங்க நோ கமென்ட்ஸ்னு சொல்லிருக்கலாம். ஆனா அதுக்கு என்ன அர்த்தம்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. ராஜபக்சே மேல அவ்ளோ பாசம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்)

The Hindu: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலையைத் தமிழக பா.ஜ.க. வரவேற்கிறது, தேசியத் தலைமையோ எதிர்க்கிறது. ஏன்? பல்வேறு விஷயங்களில் மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் வேறுபட்டுப் பேசுவது ஏன்?

Rajnath Singh: எங்களது ஒரு தேசிய கட்சி. இதன் மாநிலம் மற்றும் தலைமைக்கு இடையே இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நீங்கள் கூறுவது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இதுகுறித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பேசுவோம். இனி இதுபோன்ற தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

(இது உலக மகா நடிப்பு சார்... ஒரு நிருபர் சொல்லி தான் உங்க மாநில கிளைல என்ன நடக்குதுன்னு தெரிந்துக்கொள்கின்ற நிலையில் இருக்கீங்க...இதுல நீங்க அந்த கட்சிக்கு தலைவர் வேற...சபாஷ். சரி விடுங்க, இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாதுல்ல, அப்ப சீக்கிரமே முடிவு பண்ணி யார் சொல்றது சரின்னு அறிக்கை விடுங்க)

The Hindu: உங்கள் அணியில் இணைந்துள்ள வைகோ, சேர இருக்கும் பா.ம.க-வும் கூட வரவேற்கிறார்களே?

Rajnath Singh: (லேசான புன்னகையுடன்) இது விஷயமாக அவர்களிடம் பேசுவோம். 

(என்னத்த பேச போறீங்க...அடங்கப்பா ஆள விடுங்க)..

இப்படி ஒரு பொருந்தா கூட்டணி உங்களுக்கு தேவையா வை.கோ மற்றும் தமிழின உணர்வாளர்களே? சொன்னது சு.சாமி போன்ற ஆட்கள் அல்ல, பாஜகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர். பாஜக ஆட்சி கட்டில் ஏறினால் தமிழினத்திற்கு விடிவு பிறக்கும் என்று சிலர் கூறுவதை பார்க்கும் போது over to Rajnath Singh and BPJ's policies என்பதை தவிர வேறு எதுவும் கூற தோன்றவில்லை. 

நன்றி: தி ஹிந்து 
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Wednesday 26 February 2014

முஸ்லிம்களே ஒருமுறை வாய்ப்பளியுங்கள் - பாஜக தொபுக்கடீர்..


"மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

'பிரதமர் பதவிக்கு மோடி - இலக்கு 272-ல் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பேசியது:

'நான் சொல்வதை தயவுசெய்து குறித்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது, எங்கேயாவது எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால், நாங்கள் தலை வணங்கி மன்னிப்புக் கோருவோம் என்று உறுதியளிக்கிறேன்.

பாஜக, இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. இந்த விஷயத்தில் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை இஸ்லாமிய சமூகத்தினர் நம்ப வேண்டாம். தேச நலனைக் கருத்தில்கொண்டு, இஸ்லாமியர்கள் இம்முறை பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எங்களை ஒருமுறைத் தேர்வு செய்து பாருங்கள். உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், எங்களுக்கு அதன்பின் ஒருபோதும் ஆதரிக்க வேண்டாம்.

ஓர் அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்லாமல், சகோதரத்துவமும், மனிதநேயமும் மிக்க வலிமையான தேசத்தை உருவாக்குவதற்கு இஸ்லாமிய சமூகத்தினர் பாஜகவை ஆதரிக்க வேண்டும்' என்றார் ராஜ்நாத் சிங்"

நன்றி: தி ஹிந்து. 

தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்ன கூத்தடிக்க போகின்றதோ பாஜக. 

ராஜ்நாத் சிங் அவர்களே, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது' என்ற பழமொழி உங்களுக்கு அப்படியே பொருந்துகின்றது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி பேசும் போது கொஞ்சம் கூட உங்க மனசாட்சி உறுத்தவில்லையா? 

வாய்ப்பு என்பது யாருக்கு வழங்கப்பட வேண்டியது? தேளை மடியில் வைத்துக்கொன்டு அது கொட்டாது, பயப்படாம இருங்க என்று கூறுபவர்களுக்கு வழங்கப்படுவதா வாய்ப்பு? வகுப்புவாத சித்தாந்தங்களை தன் அடிப்படையிலேயே வைத்துக்கொண்டுள்ள நீங்கள் இப்படியாக பேசும் போது கொஞ்சம் கூட யோசிக்க தோன்றாதா?

அத்வானி நடைப்பயணம், பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் இனப்படுகொலை, முஸாபர்நகர் வகுப்பு கலவரம் இத்யாதி இத்யாதி என்று வரிசையாக மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு இன்று முஸ்லிம்களின் பக்கம் தொபுக்கடீர் என்று விழுகின்றீர்களே உங்களையெல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது? 

அதிலும் மோடி போன்ற ஒருவரை பிரதம வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் பேசக்கூடிய தேன் தடவிய வார்த்தைகளுக்கு மயங்கும் நிலையில் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை. நீங்கள் ஏற்படுத்திய வகுப்புவாத காயங்களின் வடு ஆறாமல் உறுத்திக்கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் சந்திப்போம் அய்யா. எங்களின் வேதனையை உணர்ந்த முஸ்லிமல்லாத சகோதரனோடு இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் உங்கள் தோல்விக்காக பாடுபடுவான். 

உங்கள் பேச்சை படிக்கும் போது, இம்சை அரசன் படத்தில் தியாகு சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வந்து தொலைகின்றது. "படுத்தே விட்டாரையா"


Sunday 23 February 2014

சிறு தானிய உணவு திருவிழா...


"ஐந்திணை மற்றும் தளிர்கள், தர்மபுரியில் ஏற்பாடு செய்திருந்த சிறு தானிய உணவு திருவிழாவில் நேற்று நான் கலந்திருந்தேன், அருமையான நிகழ்வாக அமைந்திருந்தது. நல்ல கூட்டம், நான் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. நல்ல விடயங்களை கேட்க கட்டணம் செலுத்தி இவ்வளவு மக்கள் வந்திருந்தது ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. அதில் அதிகமான பெண்கள் என்பது இன்னும் ஆச்சரியம் தான். நாம் மக்களை அணுகும் போது இன்னும் நேர்மறையாக அணுக வேண்டும் என உணர்ந்து கொள்ள முடிந்தது.



நம் தமிழ் மண்ணுக்கும் தமிழனுக்கும் ஏற்ற உணவுகள் சிறு தானியங்கள் (கம்பு, சாமை, திணை, சோளம், குதிரைவாளி மற்றும்....) தான் என அழகாகவும் உறுதியாகவும் கூறப்பட்டது, மாற்று வாழ்வியலுக்கான அடிப்படை தேவைகளான மாற்று உணவு (மரபு உணவு), மாற்று மருத்துவம், மாற்று கல்வி முறை மற்றும் மாற்று பொருளாதார கொள்கை போன்றவற்றை பற்றிய தெளிவான பார்வையை புரிய முடிந்தது. 

நாட்டில் நடக்கும் அனைத்து கொள்ளைகளுக்கும், கொலைகளுக்கும், வள சூறையாடல்களுக்கும் இங்குள்ள ஒவ்வொரு தனி மனிதனும் பொறுப்பேற்று கொள்ள வேண்டும் கூறிய செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் அவர்களின் வார்த்தைகள் இன்று நாம் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு சுயநலவாதியாக மாறிபோய் உள்ளோம் என உணர்த்தியது. இன்று தண்ணீரின் தேவையை கொண்டும் மின்சாரத்தின் அவசியத்தை கொண்டும் ஆளும் அரசாங்கங்கள் மக்களை எவ்வாறெல்லாம் அடக்கி ஒடுக்குகின்றன என்பதையும் அதன் பின்னாடி நடைபெறும் பன்னாட்டு அரசியலை பற்றியும் தெளிவாக முன் வைத்தார். 



அடைக்கபட்ட சூழலில், அடக்கு முறையால் கல்வியை கற்று தரும் மெக்காலேயின் கல்வி முறை அவர்களுக்கு தேவையான அடிமைகளை உருவாக்கி தரலாம், டாக்டர்களை, எஞ்சினியர்களை உருவாக்கலாம் ஆனால் சமூகத்து தேவையான நல்ல மனிதர்களை ஒரு நாளும் உருவாக்காது, இயற்கையை ஒட்டிய சுதந்திரமான சிந்தனையை வளர்க்கும் கல்வியே காலத்தின் தேவை, என்று முழக்கமிட்ட மீனாட்சி உமேஷின் வார்த்தைகள் ஆழமான அர்த்தத்தை கொண்டவை. 

மாற்று மருத்துவம் குறித்து உரையாற்றிய உமர் பாரூக், இன்றைய தேவை என்பது மாற்று அல்ல மரபு வாழ்வியலே, அது நம்மிடம் தான் உள்ளது, நமக்குள்ளே உள்ளது. இன்றைய அலோபதி மருத்துவம் என்பது மேலை நாடுகளின் மருந்து வியாபாரம் தானே தவிர மனித நலம் சார்ந்தது அல்ல என கூறி இன்றைய அலோபதி டாக்டர்களின் வியாபார முகத்தையும், தேசம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சந்தையாக இருப்பதையும் தோலுரித்தார்.

இறுதியாக செந்தமிழனின் உரை அமைந்திருந்தது, நிலைக்கு திரும்புவோம் எனும் உரையில் மரபு வாழ்வியலின் அவசியத்தையும், இயற்கை சார்ந்து வாழ்வதையும் அதனை போற்றி பாதுகாப்பதையும் இல்லையேல் நாளைய தலைமுறை உணவுக்காக தேடி திரியும் நிலை ஏற்படும் என உணர்த்தினார், இன்றைக்கு நாமெல்லாம் எந்த அளவுக்கு பணம் தயாரிக்கும் இயந்திரங்களாக, சுயநலவாதியாக, சுயசார்பு அற்றவர்ளாக மாற்றபட்டுள்ளோம் என்பதையும் கூறினார், மரபுக்கு திரும்புதலே உண்மை பகுத்தறிவு எனவும், இதனை ஏற்காத நவீன சிந்தனையாளர்களும் பகுத்தறிவுவாதிகளும் ஒருவேளை இதனை பிற்போக்குதனம் என கருதும்பட்சத்தில், இந்த நவீனமும், பகுத்தறிவும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சமூகத்துக்கும் தராத மகிழ்ச்சியை, வாழ்வின் இன்பத்தை அத்தகைய பிற்போக்கு தனம் தருகிறதெனில் அத்தகைய பிற்போக்குவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே என கூறியது! உண்மையாகவே பட்டது நமக்கும்! 

அப்புறம் என்ன? லட்டு, அல்வா, ஜூஸ், தோசை, பக்கோடா, முறுக்கு, பாயாசம், பொங்கல், பிரியாணி என (சிறு தானியங்களில் செய்யபட்டவை) எதையும் விடவில்லை! செம டேஸ்ட்... ஆஆவ்! ஏப்பம் சார்!"

நன்றி: சகோ அஹ்மத் இஸ்மாயில்

Sunday 9 February 2014

இஸ்லாமை பின்பற்றுகின்றேன் - அறிவித்தார் யுவன் சங்கர் ராஜா..


பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் ஷங்கர் ராஜா தான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக இன்று அறிவித்துள்ளார். இதுக்குறித்த தகவல்கள் சமூக தளங்களில் சில நாட்களாக சுற்றிக்கொண்டிருந்தாலும், யுவன் இதுக்குறித்து எதுவும் தெரிவிக்காததால் வதந்தி என்றே கருதப்பட்டது. இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஒரு இஸ்லாமிய பெண்ணை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார் என்றும் கூட செய்திகள் பரவியது.

இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கீழ்காணும் கருத்தை தெரிவித்துள்ளார் யுவன். 

"I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah"
நான் மூன்றாவது முறையாக திருமணம் செய்யவில்லை. அந்த செய்தி பொய்யானது. ஆம், நான் இஸ்லாமை பின்பற்றுகின்றேன், அதுக்குறித்து பெருமையும் படுகின்றேன். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரிதாவதாக...

மேலும் அவர் கூறுகையில், 

"My family supports my decision and there is no misunderstanding between me and my dad."
என்னுடைய முடிவை என் குடும்பம் ஆதரிக்கின்றது. இது தொடர்பாக என் தந்தைக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. 


யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இங்கே 

யுவன், உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக...

நன்றி: ஆஷா பர்வீன்
ஆதாரம் சரிபார்த்தல் & கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Tuesday 4 February 2014

மோடி - ஹிட்லர்: ஓர் உணர்வுப்பூர்வ ஒப்பீடு..


       டால்ஃப் ஹிட்லர் யூத இனப் படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, கற்றறிந்த, நடுத்தர ஜெர்மானியர்கள் செயலற்று அமைதியாக நின்றனர் என்று வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கனத்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். விஷயத்தின் விபரீதத்தை மக்கள் உணராமல் இருந்திருக்கலாம். அல்லது, ஹிட்லரின் பிரசாரத்தை நம்பி, நம் நன்மைக்காகத்தானே இவ்வாறு செய்கிறார் என்று நினைத்திருக்கலாம். அல்லது, ஓர் அரசை எதிர்த்து சாமானியர்கள் நம்மால் என்ன செய்துவிடமுடியும் என்று கையறு நிலையில் அனைத்தையும் சகித்துக்கொண்டு இருந்திருக்கலாம். காரணங்கள் அல்ல, விளைவுகளே இங்கு முக்கியம்.  


யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பது முக்கியம்.  ரகசியமாக அல்ல, எல்லோருக்கும் முன்னால் திட்டமிட்டு வதை முகாம்களை உருவாக்கி, யூதர்களைப் பட்டவர்த்தனமாக அழித்தொழித்தான் ஹிட்லர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 2004) இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு குஜராத் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் உண்மையில் தீவிரவாதிகள் அல்ல; நடைபெற்றது போலி என்கவுன்ட்டர்தான் என்று சிபிஐ தற்போது அறிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக குஜராத்தைச் சேர்ந்த ஏழு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் விமரிசன வட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறார்.

ஹிட்லர் என்னும் ஆளுமை உருவான கதையும் அவர் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறும் The Rise and Fall of Third Reich-ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் ஏன், எவ்வாறு யூதர்களைத் தேர்ந்தெடுத்தான், எப்படி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தான், யூத எதிர்ப்பை எப்படி ஒரு சித்தாந்ததமாக வடிவமைத்தான், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எப்படித் தன் கனவைச் செயல்படுத்தத் தொடங்கினான் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிட்லரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிடுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  மாறாக, ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட விரும்புகிறேன்.

யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் வெறுப்பு பிரசாரத்தை ஜெர்மானியர்கள் ஆட்சேபிக்கவில்லை. அதில் பெரிதளவும் உண்மை இருப்பதாக அவர்கள் நினைத்தனர். யூதர்களை ஜெர்மானியர்களாக அவர்களால் ஏற்கமுடியவில்லை. யூதர்களுக்குத் தேச பக்தி இல்லை என்றும் அவர்கள் தனியொரு குழுவாக இருக்கிறார்கள் என்றும் நமக்கு வரவேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறித்துக்கொள்கிறார்கள் என்றும் ஜெர்மானியர்கள் நம்பினார்கள். இந்த பெரும்பான்மை நம்பிக்கையின் மீதே ஹிட்லர் தன் வெறுப்பு அரசியலைக் கட்டமைத்துக்கொண்டான். இந்த வெறுப்பு அரசியலைக் கொண்டுதான் அவன் யூதர்களைக் கொல்லத் தொடங்கினான்.


நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இந்துக்களையே இந்தியர்களாகக் காண்கின்றனர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே அவர்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். மோடி வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களில் உரையாடியிருக்கிறார். 2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்குப் பங்கு இருக்கிறது என்பது மட்டுமல்ல, 2002 சம்பவத்தை தனது உந்து பலகையாகப் பயன்படுத்தி மேலேழும்பி வந்தவர் அவர். சந்தேகத்துக்கு இடமின்றி அதிலிருந்து பெரும் ஆதாயமும் அடைந்திருக்கிறார்.

அந்த வகையில், ஹிட்லர், மோடி ஆகிய இருவருடைய எழுச்சியின் அடித்தளத்திலும் வெறுப்பு அரசியல் (அல்லது வெறுப்பு அரசியலும்) காணக்கிடைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மோடி யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக முன்வைக்கமுடியாது. ஹிட்லரும்தான் யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஹிட்லரின் கரங்களில் படிந்த அதே ரத்தக் கறை மோடியின் கரங்களிலும் படிந்திருக்கிறது. அந்தக் கரங்களில் கறை அதிகம், இதில் குறைச்சல் என்று வேண்டுமானால் ஒருவர் வாதிடலாம்.

அல்ல, மோடியின் கரங்களில் கறையே இல்லை என்று சிலர் வாதிடும்போது தவிர்க்கயிலாதபடி ஜெர்மானியர்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள். இப்போது இஷ்ரத் ஜஹான் வழக்கு பற்றிய விவாதங்களிலும்கூட இவர்கள் நரேந்திர மோடியைத் தப்புவிக்கவே ஆர்வமாக இருக்கிறார்கள். ‘இஷ்ரத் ஜஹான் மோதல் கொலை மோடிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லையா? 2002 சம்பவத்தில் மோடி நேரடியாக ஈடுபட்டார் என்று எங்காவது நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறதா? (கரண் தாப்பருடனான முடிவுறாத டிவி பேட்டியின்போதும் மோடியே இதையே கேட்டார்). மோடியின் குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அந்த ஒரு சம்பவம் (2002) நீங்கலாக மோடி மீது ஏதாவது குற்றம் சுமத்த முடியுமா உங்களால்?’

நம் கண் முன்னால் ஒரு பெரும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதை ஒருவர் தூண்டிவிட்டிருக்கிறார் அல்லது பின்நின்று இயக்கியிருக்கிறார் அல்லது கண்டும் காணாமல் விட்டிருக்கிறார். குறைந்தபட்சம், அதிலிருந்து நேரடி பலன் ஈட்டியிருக்கிறார். இருந்தும் எப்படி அவரை நம்மில் சிலரால் உயர்த்திப் பிடிக்க முடிகிறது? அவரைத் தாங்கி பிடிக்கவேண்டும் என்று எப்படி, ஏன் சிந்திக்கிறோம்? ’குஜராத் மாதிரி வளர்ச்சி’ நம் கண்களைச் கூசச் செய்கிறதா? அழிவை விட்டுவிட்டு வளர்ச்சியை மட்டுமே அன்னப்பறவைப் போல் நாம் உறிஞ்சி எடுத்து மகிழ்கிறோமா? என்றால், இப்படிப்பட்ட cherry picking மதிப்பீடுகளை ஹிட்லருக்கும் கூட நம்மால் அருளமுடியும் அல்லவா?

இந்துத்துவா கொள்கையோடு உடன்படுவதால் மோடியை உயர்த்திப் பிடிப்பவர்களைக்கூட புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கற்றறிந்த, நடுத்தர வர்க்க இந்தியர்களில் ஒரு சாரார் மோடியை அவருடைய ‘குஜராத் மாதிரி வளர்ச்சிக்காக’ 2002-ஐ வசதியாக மறந்துவிட்டு ஆதரிப்பதைப் பார்க்கும்போது அச்சமே ஏற்படுகிறது. 

மோடியை உயர்த்திப் பிடிப்பதன்மூலம் இவர்கள் வெறுப்பு அரசியலையும்கூட சேர்த்தே உயர்த்திப்பிடிக்கிறார்களா? இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய வெறுப்பைத்தான் இவர்கள் மோடி ஆதரவாக முன்வைக்கிறார்களா? மீண்டும் மீண்டும் மோடியை idolize செய்வதன்மூலம் இவர்கள் தெரியப்படுத்தும் செய்தி என்ன? யூதர்களை அடியோடு வெறுத்த பலர் ஹிட்லரை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அறம் சார்ந்த விழுமியங்களை நாம் மீட்டெடுக்கவேண்டிய தருணமிது. ஹிட்லரின் ஜெர்மனி செய்த தவறை மோடியின் இந்தியா இழைக்கக்கூடாது.  குஜராத் அரசு ஆவணங்கள் சொல்வதைப் போலவே அந்த மாநிலம் வளர்ச்சியடைந்திருந்தாலும்கூட நாம் நரேந்திர மோடியை நோக்கி அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பியே தீரவேண்டும்.

2002-ஐ நாமும் மறக்கக்கூடாது; மோடி அதனை மறந்துபோகவும் அனுமதிக்கக்கூடாது. மோடியின் செயல்களை நாம் நியாயப்படுத்தி பேசும் ஒவ்வொரு முறையும் நாம் வரலாற்றில் பல அடிகள் பின்னோக்கிச் செல்கிறோம். இப்படி பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து செல்லும்போது ஒரு கட்டத்தில் நாம் ஹிட்லரின் ஜெர்மனியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அறம் அத்தனை முக்கியமல்ல, வளர்ச்சியைக் காட்டினால் போதும் என்னும் அபாயகரமான செய்தியை அரசியல்வாதிகளுக்கு நாம் வெளிப்படுத்துவது இன்றைய சமூகத்தை மட்டுமல்ல இனிவரும் சமூகங்களையும் சேர்த்து பாதிக்கும். அதற்குத் துணை போன பெருமை மட்டும் நமக்கு எஞ்சி நிற்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி: மருதன், தமிழ் பேப்பர்